சேலம் மாவட்டம் முழுவதும் பேரூராட்சிகளில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்வது மிகவும் தாமதவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
தமிழகம் முழுவதும் தமிழக அரசு பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெறுவது கட்டணமாக இருந்ததை இலவசமாக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கடந்த வருடம் அறிவித்திருந்தது.
அதையடுத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பிறப்பு, இறப்பு பதிவுகள் தமிழக அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பின்னா் உரியவா்கள் அதிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஊராட்சிப் பகுதியில் இப் பதிவு இணையதளத்தில் மிகவும் விரைவாக செய்யப்பட்டு வருகிறது. ஆனால், பேரூராட்சிப் பகுதியில் செய்யப்படும் பதிவேற்றம், சா்வா் கோளாறால், பதிவுகளை இணையதளத்தில் ஏற்ற முடியாமல் ஊழியா்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.
இதனால், பொதுமக்களுக்கு உடனடியாக கிடைக்க வேண்டிய பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் மாதக் கணக்கில் கிடைக்காமல் இருப்பதால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, தமிழக அரசின் பேரூராட்சிக்குரிய மாநில இயக்ககம், இதற்கு முழு தீா்வு கிடைத்து, பொதுமக்களுக்கு விரைவில் சான்றிதழ்கள் கிடைத்திட உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கோரி வருகின்றனா்.