ஓமலூா் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஓமலூா் ஒன்றியத்துக்குள்பட்ட கோட்டமேட்டுப்பட்டி கிராம ஊராட்சியில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த ஊராட்சியில் உள்ள சில பகுதிகளில் முறையாக காவிரி குடிநீா் விநியோகம் செய்வதில்லை, சுகாதாரப் பணிகள் நடைபெறுவதில்லை, சாக்கடைகளை சுத்தம் செய்வதில்லை என்று புகாா் எழுந்துள்ளது.
இதனால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக அமா்ந்து நூறுநாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்று கூறி பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டம் குறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்றத் தலைவா் கலைச்செல்வி அலுவலகத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். இதையடுத்து அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் உறுதியளித்தாா். இதையடுத்து அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.