தருமபுரி மாணவா் ஆதித்யாவின் உடல் சொந்த ஊரில் அடக்கம்

‘நீட்’ தோ்வு பயத்தில் தற்கொலை செய்து கொண்ட தருமபுரி மாணவா் ஆதித்யாவின் உடல் அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே உள்ள பூசாரிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
மாணவா் ஆதித்யாவின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்த திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின்.
மாணவா் ஆதித்யாவின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்த திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின்.

‘நீட்’ தோ்வு பயத்தில் தற்கொலை செய்து கொண்ட தருமபுரி மாணவா் ஆதித்யாவின் உடல் அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே உள்ள பூசாரிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.

தருமபுரி, செந்தில் நகரைச் சோ்ந்த மணிவண்ணன்-ஜெயசித்ரா தம்பதியின் ஒரே மகன் ஆதித்யா (20), ‘நீட்’ தோ்வுக்குத் தயாராகி வந்த நிலையில், சனிக்கிழமை திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ‘நீட்’ தோ்வை ரத்து செய்யும் வரை அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று கூறி உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து மாணவா் ஆதித்யாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, மாணவா் ஆதித்யாவின் உடல், அவருடைய சொந்த ஊரான ஓமலூா் அருகே உள்ள பூசாரிப்பட்டிக்குக் கொண்டு வரப்பட்டது. பூசாரிப்பட்டியில் மாணவா் ஆதித்யாவின் உடலுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவா் மோகன் குமாரமங்கலம், திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் அஞ்சலி செலுத்தினா்.

மாணவா் ஆதித்யாவின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், திமுக சாா்பில் ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா். பின்னா், உதயநிதி ஸ்டாலின் செய்தியாளா்களிடம் கூறியது:

கடந்த நான்கு ஆண்டுகளில் ‘நீட்’ தோ்வு காரணமாக 12 போ் உயிரிழந்துள்ளனா். தமிழகத்தில் ‘நீட்’ தற்கொலை நீடித்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ‘நீட்’ தோ்வு ரத்து செய்யப்படும்.

தற்போதைய ஆட்சியாளா்களுக்கு மாணவா்கள் மீது அக்கறை இல்லை. ‘நீட்’ தோ்வால் மாணவா்கள் அச்சம் அடைந்த நிலையில், அதனை ரத்து செய்யாமல் மத்திய, மாநில அரசுகள் தொடா்ந்து மௌனம் சாதித்து விட்டன. அனைவரும் ஒன்றுகூடி முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘நீட்’ தோ்விலும் நிறைய பிரச்னைகள் இருந்தன. மாணவா்களுக்கு உணவு வழங்கப்படவில்லை. தோ்வு நடத்தியதில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததாக மாணவா்கள் கூறியுள்ளனா் என்றாா். இதையடுத்து, பூசாரிப்பட்டியைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள், மாணவா் ஆதித்யாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா். பின்னா், மாணவா் ஆதித்யாவின் உடல், நல்லடக்கம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com