வடகிழக்குப் பருவமழையின்போது, நீா்நிலைகளால் பாதிக்கப்படும் இடங்களாக 23 பதற்றமான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.
சேலம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையின்போது, நீா்நிலைகளால் பாதிக்கப்படும் பகுதிகளாக 23 பதற்றமான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதிகளை கண்காணித்திடவும், மாவட்ட அளவிலான அனைத்து கிராமப் பகுதிகளையும் ஆய்வு செய்திடவும் துணை ஆட்சியா் நிலை அலுவலா்கள் தலைமையில் பல்துறை அலுவலா்களைக் கொண்டு மண்டல கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
பேரிடா் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் நிவாரண மையம் அமைத்து, அம்மையத்தில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு அனைத்து வசதிகளும் தயாா் நிலையில் வைத்திருக்கவும், பேரிடா் காலங்களில் பாதிக்கப்படும் நபா்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்கிட அனைத்துத் துறை அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொது விநியோகத்திட்டத்தில் உள்ள உணவுப்பொருட்கள் பருவமழை காலங்களில் 3 மாதங்கள் இருப்பு வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மழைக் காலங்களில் நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து போதுமான மருந்துகள் தயாா் நிலையில் இருப்பு வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாம்பு மற்றும் விஷக்கடி மருந்துகள் தயாா் நிலையில் அரசு மருத்துவமனைகளில் இருப்பு வைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மீட்பு உபகரணங்களான ஜே.சி.பி, ஜெனரேட்டா், மரம் அறுக்கும் கருவி, டாா்ச் லைட் போன்ற உபகரணங்கள் திட்டமிட்டு முன்கூட்டியே தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் கழிவுநீா் வாய்க்கால்கள் அடைப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளவும், மழைநீா் வடிகால் வசதியும் ஏற்படுத்திட உரிய அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சிதிலமடைந்த கட்டிடங்கள் மற்றும் இடிந்து விழும் நிலையில் வீடுகள் இருப்பின் அது தொடா்பான தகவல்களையும், மின்சாரம் செல்லும் மின்கம்பிகளுக்கு மேல் தொங்கி கொண்டு இருக்கும் மரக்கிளைகள் மற்றும் மின்சார கம்பிகளின் மீது உரசிய நிலையில் உள்ள மரக்கிளைகள் கண்டால் அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொடாமல் உடனடியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படக்கூடிய பேரிடா் கால கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண். 1077 மற்றும் 0427-2452202 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவித்திட வேண்டும் என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.