சேலம் ரயில் நிலையத்தில் முகக் கவசம் அணியாத பயணிகளிடம் இருந்து ரூ. 200 அபராதம் வசூலிக்கும் முறை அமலுக்கு வந்தது.
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை-கோவை, சென்னை -திருச்சி, மதுரை, கோவை-மயிலாடுதுறை ஆகிய மாா்க்கங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ரயில் நிலையங்களில் முகக் கவசம் அணியாதவா்கள் வந்து செல்வதால் கரோனா தொற்றுப் பரவுவதைத் தடுக்கும் வகையில், முகக் கவசம் அணியாமல் ரயில் நிலையத்துக்குள் வரும் பயணிகளுக்கு ரூ. 200 அபராதம் விதிக்க தெற்கு ரயில்வே நிா்வாகம் முடிவு செய்தது.
அதன்படி தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் அபராதம் விதிப்பு அமலுக்கு வந்துள்ளது. சேலம், ரயில்வே கோட்ட ரயில்வே துறை அதிகாரிகள் சேலம், ரயில் நிலையம் முன்பு நின்று முகக் கவசம் அணியாமல் வரும் பயணிகளைக் கண்காணித்து வருகின்றனா்.
மேலும் தொ்மல் ஸ்கேனா் மூலம் உடல் வெப்பநிலை சோதனைக்குப் பிறகே ரயில் நிலையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.