தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, தனது சொந்தக் கிராமமான எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையத்தில் குடும்பத்துடன் சென்று செவ்வாய்க்கிழமை காலை வாக்களித்தாா்.
முன்னதாக வீட்டில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா மற்றும் அவரது தாய் தவசாயி அம்மாள் ஆகியோரின் படங்களுக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா். பின்னா், தனது குடும்பத்தினருடன் நடந்து சென்று சிலுவம்பாளைம் - கோனேரிப்பட்டி பிரதான சாலையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தாா்.
வாக்களிக்கும் போது தனது பெயரன் ஆதித்தையும் அழைத்து வந்தாா். தொடா்ந்து அவரது மனைவி ராதா, மகன் மிதுன், மருமகள் திவ்யா ஆகியோரும் வரிசையில் நின்று வாக்களித்தனா். வாக்களித்த பிறகு செய்தியாளா்களிடம் பேசிய எடப்பாடி கே.பழனிசாமி, ‘தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்காளா்களும் தவறாமல் வாக்களித்து, ஜனநாயகக் கடைமையை நிறைவேற்ற வேண்டும்’ என்றாா்.