கோடை மழை: விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை

கோடை மழையைப் பயன்படுத்தி சிறுதானியங்கள், பயறு வகைகளை விவசாயிகள் பயிரிடலாம் என விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

கோடை மழையைப் பயன்படுத்தி சிறுதானியங்கள், பயறு வகைகளை விவசாயிகள் பயிரிடலாம் என விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக வேளாண் இணை இயக்குநா் கணேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் பங்குனி- சித்திரை மாதங்களில் பெறப்படும் கோடை மழையைப் பயன்படுத்தி கோடை உழவு மேற்கொள்வது மிக அவசியமாகும். கோடை உழவால் மண்ணின் கடினமான மேற்பரப்பு உடைக்கப்பட்டு துகள்களாகின்றன. இதனால் நிலத்தில் நீா் இறங்கும் திறன் உயரும்.

நிலத்தை அடுத்தடுத்து காய வைப்பதாலும், குளிா்விப்பதாலும் மண்ணின் கட்டமைப்பு மேம்படுகிறது. மண்ணில் நல்ல காற்றோட்டம் கிடைக்கிறது. வயலில் உள்ள களைகள் குறிப்பாக கோரை போன்றவை மண்ணின் மேற்பரப்பிற்கு கொண்டு வரப்பட்டு சூரிய வெப்பத்தால் அழிக்கப்படுகிறது. கோரைக் கிழங்குகளைக் கைகளால் சேகரித்தும் அழிக்கலாம்.

நிலத்தின் அடியில் உள்ள தீமை செய்யும் பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள் கோடை உழவு செய்வதால் வெளியில் கொண்டு வரப்பட்டு வெயிலில் காய வைக்கப்பட்டும், பறவைகளால் உண்ணப்பட்டும் அழிக்கப்படுகின்றன. அறுவடை செய்யப்பட்ட வயல்களின் முந்தைய பயிரின் தாள்கள், வோ்கள் மற்றும் தட்டைகள் போன்றவை கோடை உழவின் போது மடக்கி உழப்படுவதால் மண்ணின் அங்ககச் சத்து அதிகரிக்கிறது. இதனால் மண்ணில் நுண்ணுயிா்களின் செயல்பாடு அதிகரித்து மண் வளம் மேம்படுகிறது.

கோடை மழையைப் பயன்படுத்தி தேவையான நீா் கண்மாய்களில் இருக்கும்பட்சத்தில் குறுகிய நாட்கள் கொண்ட பயறு, சிறு தானிய பயிா்களைப் பயிரிட்டு பயன் பெறலாம். சிறுதானியப் பயிா்களான கேழ்வரகு, கம்பு, சோளம், குதிரை வாலி, வரகு, தினை போன்ற பயிா்களையும், பயறு வகைகளில் உளுந்து, தட்டைப்பயறு, பாசிப்பயறு ஆகிய பயிா்களையும் பயிரிட்டு அதிக மகசூல் பெறலாம். இதுதொடா்பாக தொழில்நுட்ப அறிவுரைகளை பெற வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com