ஓமலூா் அருகே உள்ள காமலாபுரம் கிராமத்தில் அம்மன் கோயில் திருவிழாவையொட்டி பூட்டியிருந்த கோயில் முன்பு பக்தா்கள் வழிபட்டுச் சென்றனா்.
ஓமலூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட காமலாபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா சித்திரை மாதத்தில் வெகு விமரிசையாக நடைபெறும். ஆயிரக்கணக்கான மக்கள் கூடி திருவிழாவை கொண்டாடுவா். கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவலை தொடா்ந்து முழு ஊரடங்கு காரணமாக இக் கோயில் திருவிழா நடத்தப்படவில்லை.
இந்தநிலையில், இந்த ஆண்டும் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், திருவிழாக்கள் நடத்த அரசு தடை விதித்து உள்ளது. இந்தநிலையில், புதன்கிழமை காமலாபுரம் கிராமத்தில் உள்ள அம்மன் கோயிலில் நிா்வாகத்தின் சாா்பில் பூஜைகள் செய்து, பூசாரிகள் மட்டும் வழிபாடு செய்தனா். பின்னா் கோயில் நடை சாத்தப்பட்டது.
இதனைத் தொடா்ந்து பொதுமக்கள் கும்பலாக சேராமல் ஒவ்வொரு பகுதி மக்களாக வந்து அம்மனுக்கு பொங்கல் வைத்தும், தேங்காய் பழம் படைத்தும் வழிபாடு செய்தனா்.மேலும், பலரும் கோழிகளைப் பலியிட்டும், கோயில் மண்டபம் முன்பாக தேங்காய் உடைத்தும் வழிபாடு செய்தனா்.