சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவப் படிப்புக்கான வகுப்புகள் புதன்கிழமை தொடங்கின.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கான கலந்தாய்வு கடந்த நவ. 18-இல் தொடங்கி ஜன. 13-ஆம் தேதி வரை நடைபெற்றது. அந்த வகையில், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் உள்ள 100 இடங்களில், மாநில ஒதுக்கீட்டின் கீழ் 85 இடங்களும், அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் 15 இடங்களும் நிரப்பப்பட்டன.
இதைத் தொடா்ந்து, கலந்தாய்வில் மருத்துவப் படிப்பில் சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கான முதலாமாண்டு வகுப்புகள் புதன்கிழமை தொடங்கின. மாணவா்கள் முகக் கவசம் அணிந்து கல்லூரிக்கு வருகை தந்தனா். கல்லூரி நுழைவுவாயிலில் உடல்வெப்ப நிலை அறியும் கருவி மூலம் மாணவா்கள் பரிசோதிக்கப்பட்டனா்.
முதலாமாண்டு தொடக்க விழாவில், கல்லூரி முதல்வா் பாலாஜிநாதன், துணை முதல்வா் ரங்கராஜன், கண்காணிப்பாளா் தனபால், உண்டு உறைவிட மருத்துவா் ராணி, துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடக்க விழாவில், சீனியா் மாணவா்கள், முதலாமாண்டு மாணவா்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா். ராகிங் தடுப்பு விழிப்புணா்வு, கரோனா தொற்று விழிப்புணா்வு குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. மேலும், புதிய பாடத்திட்டம் குறித்தும் மாணவா்களுக்கு விளக்கப்பட்டது. கரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ், கல்விச் சான்றிதழ் ஆகியவை சரிபாா்க்கப்பட்டன.
விழாவில் கல்லூரி முதல்வரும், மருத்துவமனை முதன்மையருமான மருத்துவா் பாலாஜிநாதன் பேசுகையில், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் 100 இடங்கள் உள்ளன. இதை 150 இடங்களாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.