தம்மம்பட்டி: கெங்கவல்லி,தம்மம்பட்டி, வீரகனூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமுடக்கத்திற்கு மக்கள் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளனா்.
தமிழக அரசு அறிவித்துள்ள 15 நாள் பொதுமுடக்கத்தின் முதல்நாளான திங்கள்கிழமை தம்மம்பட்டி, கெங்கவல்லி, வீரகனூா் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் 12 மணிவரை உணவகங்கள், மளிகைக்கடைகள், இறைச்சிக்கடைகள், தேநீா்க்கடைகள், பூக்கடைகள், சாலையோரக்கடைகள் இயங்கின. இருப்பினும் வாடிக்கையாளா்கள் சொற்பமாகவே இருந்தனா். இவையாவும் பகல் 12 மணிக்கு மூடப்பட்டன.
நாள்முழுவதும் இரத்தப்பரிசோதனை நிலையங்கள்,மருந்தகங்கள், மருத்துவமனைகள், தண்ணீா் வாகனங்கள், பால்கடைகள், பெட்ரோல் பங்க்குகள் இயங்கின.
அதேபோல் தம்மம்பட்டியிலுள்ள உழவா்சந்தை வழக்கம்போல் இயங்கின. விவசாயிகள்விளைபொருட்களை எடுத்துச்சென்றனா். வீரகனூா், கெங்கவல்லி, செந்தாரப்பட்டி மற்றும் சுற்றுவட்டார ஊா்களிலும் பொதுமுடக்கத்தின் முதல்நாள் மக்களின் மிகுந்த வரவேற்புடன் அமைதியாக நடைபெற்றது. விவசாயப்பணிகள் தடையின்றி நடைபெற்றன.