தம்மம்பட்டி பகுதியில் உள்ள மருந்தகங்கள், ஊரடங்கு நேரத்தில், போலீசாருக்கு ஒத்துழைக்கும் விதமாக, திறந்திருக்க நேரக் கட்டுப்பாடு கடைபிடிக்கப்படும் என, மருந்தக உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி மற்றும், செந்தாரப்பட்டி, நாகியம்பட்டி, உலிபுரம், கொண்டையம்பள்ளி ஆகிய ஊர்களில் 30 க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் உள்ளன. தற்போது அறிவிக்கப்பட்ட ஊரடங்கில், அரசு அறிவித்துள்ள கடைகள் திறந்திருக்க, காலை 6 மணி முதல் 10 மணிவரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
மருந்தகங்களுக்கு எதுவும் நேரக்கட்டுப்பாடு கிடையாது. இந்நிலையில், ஊரடங்கு நேரத்தில், தம்மம்பட்டியில் ஊர் சுற்றும் பெரும்பாலானோரிடம், ரோந்து செல்லும் போலீசார் விசாரிக்கும் போது, அவசர தேவைக்கு மெடிக்கல் செல்கிறேன், என பொய்யாகக் கூறி தப்பிவிடுகின்றனர். மருத்துவ தேவை என, அவர்கள் காரணம் கூறிவிடுவதால், போலீசாரும். அவர்களை விடுவித்து விடுகின்றனர்.
அதையடுத்து, தம்மம்பட்டி போலீசாருக்கு, மருந்தக உரிமையாளர்கள் ஒத்துழைக்கும் விதமாக, தம்மம்பட்டி பகுதியில் மருந்தகங்கள் குறிப்பிட்ட நேரம் மட்டுமே திறக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, தினமும் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும். மாலை 5 மணி முதல், இரவு 10 மணி வரை மட்டுமே, மருந்தகங்கள் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.