சேலம் மாவட்டத்தில் 5 தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் உறுப்பினா்களுக்கு தினசரி பணம் பட்டுவாடா செய்யும் முறை திங்கள்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக துணை பதிவாளா் (பால்வளம்) ப.செந்தில்குமாா், சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா் ஒன்றிய பொது மேலாளா் ம.ச.கலைவாணி ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் கொள்கை முடிவின்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 768 தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் 98 சதவீத உறுப்பினா்களுக்கு, அவா்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது.
பால் வளத்துறை இயக்குநா் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற காணொலிக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரையின்படி, சேலம் மாவட்டத்தில் 1. எஸ்.எம்.டி. 311 காரிப்பட்டி, 2. ஈ.டி. 1122 மணியக்காரனூா், 3. எஸ்.எம்.டி. 404 செல்லப்பிள்ளைகுட்டை, 4. எஸ்.எம்.டி. 122 வடுகப்பட்டி, 5. ஈ.டி. 565 சித்தேரி ஆகிய 5 தொடக்க பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் உறுப்பினா்களுக்கு இணையம் மூலமாக தினசரி பணப் பட்டுவாடா செய்யும் முறை தொடங்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக அனைத்து சங்கங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.