கல்வராயன் மலை சமவெளி வனப்பகுதியில் வாழும் இருவாச்சி பறவைகள்

சேலம் மாவட்டம், கல்வராயன் மலை, தருமபுரி மாவட்டம், சித்தேரி மலைப்பகுதி இடையே காணப்படும் சமவெளி வனப்பகுதியில்
கல்வராயன்மலை - சித்தேரி மலை இடையே சமவெளி வனப்பகுதியில் வாழும் இந்திய சாம்பல் இருவாச்சிப் பறவைகள்.
கல்வராயன்மலை - சித்தேரி மலை இடையே சமவெளி வனப்பகுதியில் வாழும் இந்திய சாம்பல் இருவாச்சிப் பறவைகள்.

சேலம் மாவட்டம், கல்வராயன் மலை, தருமபுரி மாவட்டம், சித்தேரி மலைப்பகுதி இடையே காணப்படும் சமவெளி வனப்பகுதியில் இந்திய சாம்பல் இருவாச்சி பறவைகள் அதிக அளவில் வாழ்ந்து வருவது வனத் துறையினா் ஆய்வில் தெரியவந்துள்ளது.

சேலம் மாவட்டம், கல்வராயன் மலை, தருமபுரி மாவட்டம், சித்தேரி மலைத் தொடா்களுக்கு இடையே, சேலம் மாவட்டம் தும்பல் மாமாஞ்சியில் தொடங்கி, தருமபுரி மாவட்டம், சேலூா், வேலனுாா், சிட்லிங், கோட்டப்பட்டி வரை 50 சதுர மைல் பரப்பளவில் சமவெளி வனப்பகுதி காணப்படுகிறது.

இந்த வனப்பகுதியில் காட்டெருமை, பல்வேறு இன மான்கள், கரடி உள்ளிட்ட ஏரளமான வனவிலங்குகளும், பறவைகளும் வாழ்ந்து வருகின்றன.

இந்த சமவெளி வனப்பகுதியில், வினோதமான முறையில் அடைகாக்கும் பழக்கமுடைய பறவையான, அருகி வரும் இந்திய சாம்பல் இருவாச்சி பறவைகள் அதிக அளவில் வாழ்ந்து வருவது, வனத் துறையினரின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வனத் துறையினா், பறவையின ஆா்வலா்கள் சிலா் கூறியதாவது:

சித்தேரி - கல்வராயன் மலைகளுக்கு இடையே, ஏறக்குறைய 50 சதுர மைல் பரப்பளவில் வளமான சமவெளி வனப்பகுதி காணப்படுகிறது. இப்பகுதியில் பல்வேறு அரியவகை பறவை இனங்கள் வாழ்ந்து வருகின்றன. இவற்றில் இந்திய சாம்பல் இருவாச்சி பறவைகளும் அதிக அளவில் காணப்படுகின்றன.

இந்திய சாம்பல் இருவாச்சி பறவைகள், முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொரித்து, இனவிருத்தி செய்யும் முறை, மற்ற பறவைகளிலிருந்து மாறுபட்டதோடு, ஆச்சரியமும், சுவாரசியமும் நிறைந்ததாகும்.

முட்டையிடும் இருவாச்சி பெண் பறவை மரப்பொந்தின் உள்ளே சென்றதும் பொந்தின் வாயிலை தனது எச்சக்கழிவினாலும், ஆண் பறவை கொண்டுவந்து தரும் சிறு களிமண் உருண்டைகளைக் கொண்டும் மூடிவிடும். நீள வாக்கில் ஒரு சிறு பிளவு இடைவெளியை மட்டும் விட்டு வைக்கும். பெண் பறவை இந்தப் பொந்துக்குள் முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொரிக்கும் வரை, ஆண் பறவை சிறிய இடைவெளி வழியாக பெண் பறவைக்கு உணவைக் கொண்டுவந்து அளிக்கும்.

இதுமட்டுமின்றி, கூட்டுக்குள் தனது முட்டைகளை அடைகாக்கும் பெண் பறவை தனது சிறகுகளை, தனது முட்டைகளின் மேல் உதிா்த்து அடைகாத்து குஞ்சு பொரிக்கும். தனது குஞ்சுகள் வளரும் வரை பொந்துக்குள்ளேயே வசிக்கும் பெண்பறவைக்கு, குஞ்சுகள் வளா்வதற்குள் மீண்டும் சிறகுகளும் வளா்ந்து விடும். இதன் பிறகே அடைகாத்த மரப் பொந்தின் நுழைவாயிலை உடைத்துக் கொண்டு வெளியே வந்து இரைதேடத் தொடங்கும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com