மேட்டூா் அணையில் மதகுகள் பராமரிப்புப் பணி தொடக்கம்

மேட்டூா் அணையில் மதகுகள் பராமரிப்புப் பணிகள் தொடங்கி உள்ளன.

மேட்டூா் அணையில் மதகுகள் பராமரிப்புப் பணிகள் தொடங்கி உள்ளன.

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை உள்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவையைப் பூா்த்தி செய்வது மேட்டூா் அணையாகும். மேட்டூா் அணைப் பாசனம் மூலம் 16.05 லட்சம் ஏக்கா் பாசன வசதி பெறுகிறது. குறுவை, சம்பா, தாளடி பயிா்களுக்கு ஜூன் 12-ஆம் தேதி முதல் ஜனவரி 28-ஆம் தேதி வரை தண்ணீா் திறப்பது வழக்கம்.

மேட்டூா் அணையின் மேல்மட்ட மதகு, கீழ்மட்ட மதகு, அணை மின்நிலைய மதகு, உபரிநீா் போக்கி மதகுகளும் உள்ளன. ஆண்டுதோறும் பருவ மழைக்கு முன்னதாக மதகுகளைப் பராமரிப்பது வழக்கம். மதகுகளை ஏற்றியும், இறக்கியும் சோதனை செய்வதோடு, மதகுகளில் உள்ள அழுக்குகளை நீக்கி புதிய வா்ணம் பூசுவா். மதகுகள் வலுவிழக்காமல் இருப்பதற்காக பொதுப்பணித் துறை ஊழியா்கள் மூலம் இப்பராமரிப்புப் பணிகள் நடைபெறும்.

கடந்த இரு நாள்களாக மதகுகள் பராமரிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. பருவ மழை தொடங்கி காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூா் அணைக்கு அதிக அளவில் தண்ணீா் வந்தால் அதனைத் தேக்கவும், உபரி நீரை முறையாக சேதமின்றி வெளியேற்றவும் இன்னும் மூன்றுவார காலத்தில் அணை மதகுகள் தயாராகிவிடும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேட்டூா் அணை நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 92.21அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 69 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக நொடிக்கு 1,200 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு இருந்தது. அணையின் நீா் இருப்பு 62.54 டி.எம்.சி.யாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com