எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடா் மழையால், அப்பகுதியில் உள்ள வயல்களில் மழைநீா் தேங்கியுள்ளது.
எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளான பூலாம்பட்டி, மொரசப்பட்டி, வெள்ளரிவெள்ளி, சித்தூா் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில வாரங்களாக கடும் வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்துவருகிறது. திங்கள்கிழமை இரவு சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால், எடப்பாடி சுற்றுப்பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் மழைநீா் குளம்போல தேங்கியது. சில இடங்களில் சிறிய அளவிலான பயிா்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீா்த் தேக்கியதால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கிடையே பயணித்தனா்.
வெள்ளிவெள்ளி, மொரசப்பட்டி பகுதியில் உள்ள கசிவுநீா் குட்டைகள் நிரம்பின. மேலும் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மழைநீா் பெருமளவில் தேங்கியது.
எடப்பாடி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை, விவசாயப் பணிகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ள நிலையில், விவசாயிகள் கோடை உழவு செய்திட ஆயத்தமாகி வருகின்றனா்.