வாழப்பாடி பகுதியில் தொடர்ந்து கோவில் உண்டியலை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பல்

வாழப்பாடி பகுதியில் கிராமப்புற கோவில் உண்டியலை குறிவைத்து, மர்ம கும்பல் தொடர்ந்து கொள்ளையடித்து வருவதால், கிராமப்புற மக்கள் பீதியும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.
மர்ம கும்பலால் உண்டியல் உடைக்கப்பட்ட சேசன்சாவடி குடித்தெரு மாரியம்மன் கோவில்.
மர்ம கும்பலால் உண்டியல் உடைக்கப்பட்ட சேசன்சாவடி குடித்தெரு மாரியம்மன் கோவில்.

வாழப்பாடி பகுதியில் கிராமப்புற கோவில் உண்டியலை குறிவைத்து, மர்ம கும்பல் தொடர்ந்து கொள்ளையடித்து வருவதால், கிராமப்புற மக்கள் பீதியும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். இந்த மர்ம கும்பலை கண்டு பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்திலுள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில், மர்ம கும்பல் கடந்த மாதம் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றது. இதனைத்தொடர்ந்து, கடந்த நவம்பர் 27-ல், வாழப்பாடி அருகே சிங்கிபுரம் நாடார் தெரு மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்த மர்ம கும்பல் பணத்தை கொள்ளையடித்துச்சென்றது. 

டிசம்பர் 3 வெள்ளிக்கிழமை இரவு ஏத்தாப்பூர் அருகே வீரகவுண்டனூர் மாரியம்மன் கோவில் உண்டியலை பணத்தோடு மர்ம கும்பல் தூக்கிச் சென்றது. இதுகுறித்து வாழப்பாடி மற்றும் ஏத்தாப்பூர்  போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், வாழப்பாடி அருகே காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சி சேசன்சாவடி கிராமத்திலுள்ள 2 மாரியம்மன் கோவில்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு புகுந்த மர்ம கும்பல், உண்டியலை தூக்கிச்சென்று உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

 வாழப்பாடி பகுதி கிராமங்களில், அம்மன் கோவில் உண்டியல்களை குறிவைத்து மர்ம கும்பல் தொடர்ந்து கொள்ளையடித்து வருவதால் இப்பகுதி மக்கள் பீதியும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். கோவில் உண்டியல்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் மர்ம கும்பலை கண்டுபிடிக்க முடியாமல், வாழப்பாடி உட்கோட்ட போலீஸார் திணறி வருகின்றனர்.

இதுகுறித்து சேசன்சாவடி கிராம மக்கள் கூறியதாவது:  எங்களது கிராமத்தில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள பெரியாண்டிச்சி அம்மன்  கோவில் உண்டியல் பணம் கடந்த மாதம் மர்மநபர்களால் கொள்ளை அடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது, 2  மாரியம்மன் கோவில்களிலும் உண்டியலை உடைத்து மர்ம கும்பல் ஏறக்குறைய ரூ 1.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

தொடரும் கோவில் உண்டியல் உடைப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த, வாழப்பாடி உட்கோட்ட போலீஸார் இரவு நேர ரோந்து பணி அதிகரிக்க வேண்டும். மர்ம கும்பலால் கொள்ளையடிக்கப்பட்ட கோவில் உண்டியல் பணத்தை மீட்டுக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com