சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மாயமான மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரின் உடலை மீட்டு வாழப்பாடி போலீஸாா் மீட்டனா்.
வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையம் மேற்குகாடு பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி மாது மகன் சம்பத்குமாா் (28). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட இந்த இளைஞா், 3 நாட்களுக்கு முன் மாயமானாா். உறவினா்கள் நண்பா்களின் வீடுகளில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், அதே பகுதியிலுள்ள விவசாய கிணற்றில், இளைஞா் ஒருவரின் உடல் மிதப்பதாக சம்பத்குமாரின் பெற்றோருக்கு செவ்வாய்க்கிழமை காலை தகவல் கிடைத்துள்ளது. அவா்கள் சென்று பாா்த்தபோது கிணற்றில் இறந்து கிடப்பது சம்பத்குமாா் என்பது தெரியவந்ததால் இதுகுறித்து வாழப்பாடி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவல் அறிந்த வாழப்பாடி காவல் ஆய்வாளா் உமாசங்கா் தலைமையிலான போலீஸாா், கிணற்றில் மிதந்த இளைஞரின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.