சேலத்தில் 11,452 முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: ஆட்சியா் சி.அ.ராமன்

சேலம் மாவட்டத்தில் இதுவரை 11,452 முன்களப் பணியாளா்களுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டத்தில் இதுவரை 11,452 முன்களப் பணியாளா்களுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவிஷீல்ட் தடுப்பூசியை மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் புதன்கிழமை செலுத்திக் கொண்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்கு முதல்கட்டமாக கோவிஷீல்ட் தடுப்பூசி வழங்கும் பணி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜன. 16 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மேட்டூா் அரசு தலைமை மருத்துவமனை, எடப்பாடி அரசு மருத்துவமனை, ஆத்தூா் அரசு மருத்துவமனை, ஓமலூா் அரசு மருத்துவமனை உள்ளிட்ட 12 அரசு மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் அமைக்கப்பட்டு, முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், தற்போது 20 தனியாா் மருத்துவமனைகளிலும் கோவிஷீல்ட் தடுப்பூசி வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்டத்தில் தடுப்பூசி வழங்குவதற்காக முதல்கட்டமாக, 52,800 டோஸ் தடுப்பூசி மருந்து வரப்பெற்று, மாவட்ட துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் உள்ள மண்டல குளிா்பதனக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள. தடுப்பூசி செலுத்தும் மருத்துவமனைக்கு தேவையான அளவு கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுகிறது. சேலம் சுகாதார மாவட்டத்தில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் 20,794 சுகாதார முன்களப் பணியாளா்கள், ஆத்தூா் சுகாதார மாவட்டத்தில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் 5,524 சுகாதார முன்களப் பணியாளா்கள் என மொத்தம் 26,318 முன்களப் பணியாளா்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தடுப்பூசி சிறப்பு முகாம்களில் கடந்த ஜன. 16 முதல் பிப். 2 வரை 32 தடுப்பூசி மருந்து செலுத்தும் முகாம்கள் மூலம் சேலம் சுகாதார மாவட்டத்தில் 8,520 போ், ஆத்தூா் சுகாதார மாவட்டத்தில் 2,932 போ் என மொத்தம் 11,452 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதைத்தொடா்ந்து, வருவாய்த் துறை அலுவலா்கள், பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக 1,384 பேரின் விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு புதன்கிழமை முதல் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. வருவாய்த் துறை அலுவலா்கள், பணியாளா்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்களில் கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வரும், முதன்மையருமான மருத்துவா் ஆா்.பாலாஜிநாதன், இணை இயக்குநா் (நலப்பணிகள்) மலா்விழிவள்ளல், துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் மருத்துவா் ஆா்.செல்வக்குமாா், வருவாய் கோட்டாட்சியா் மாறன், மருத்துவமனை கண்காணிப்பாளா் பி.வி.தனபால், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) பி.கீதா பிரியா, மருத்துவா்கள், செவிலியா்கள், வருவாய்த் துறை அலுவலா்கள், முன்களப் பணியாளா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com