சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் தமிழகரசின் சார்பில் பொங்கல் பண்டிகைக்காக வழங்கப்படும் ரொக்கம் ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்புகளை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பணிகள் திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.
பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கம் ரூ.2,500 உடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பான ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு நீள கரும்பு, 5 கிராம் ஏலக்காய், தலா 20 கிராம் முந்திரி, திராட்சை ஆகியவைகள் வழங்க தமிழகரசு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து சங்ககிரி வட்டத்தில் உள்ள 48 முழு நேரமும், 87 பகுதி நேர கடைகள் உள்பட மொத்தம் 135 ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்கும் 73,000 பேருக்கு அவைகளை வழங்கும் பணிகளை தேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக்தலைவரும், அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினருமான கே.வெங்கடாஜலம் சங்ககிரி அருகே உள்ள கத்தேரி, சாமியம்பாளையம் ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி தொடக்கி வைத்தார்.
சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் மு.அமிர்தலிங்கம், வட்டாட்சியர் எஸ்.விஜி, வட்ட வழங்கல் அலுவலர் சிவராஜ், அதிமுக மேற்கு ஒன்றியச் செயலர் சுந்தரராஜன், கிழக்கு ஒன்றிய துணைச் செயலர் மருதாசலம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஏ.பி.சிவக்குமாரன், அரசு வழக்குரைஞர் ஆர்.சுப்ரமணி, ஒன்றிய ஜெயலிலதா பேரவை செயலர் மோகன்ராஜ், மேற்கு ஒன்றிய துணைச் செயலர் வேலுமணி, வீராச்சிப்பாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் சண்முகம்,அதிமுக நிர்வாகிகள் மாதேஸ்வரன், பழனிசாமி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.