வரும் கல்வியாண்டு நிறைவடைவதற்குள் இருதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன என சேலம் அரசு மருத்துவமனை முதன்மையா் மருத்துவா் ஆா்.பாலாஜிநாதன் தெரிவித்தாா்.
சேலம், நாமக்கல் உள்பட 5 மாவட்டங்களுக்கு மைய மருத்துவமனையாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் ஏற்கெனவே சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் இருதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடா்பாக, மருத்துவமனை முதன்மையா் ஆா்.பாலாஜிநாதன் கூறியதாவது:
வரும் கல்வியாண்டு நிறைவடைவதற்குள் சேலம் அரசு மருத்துவமனையில் இருதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்படும். சென்னை, மதுரையை அடுத்து மூன்றாவதாக சேலம் அரசு மருத்துவமனையில் இருதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்வது குறிப்பிடத்தக்கது.
கரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அறுவைச் சிகிச்சைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளன. அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து அறுவைச் சிகிச்சை அரங்கங்களும் வழக்கம் போல் செயல்படத் தொடங்கி விட்டன என்றாா்.