சேலத்தில் குடிக்க பாதுகாப்பற்ற 19 குடிநீா் ஆலைகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் பாதுகாப்பற்ற, தரக்குறைவான குடிநீா் கேன்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்புப் பிரிவுக்கு புகாா் சென்றது. இதில் 45 குடிநீா் ஆலைகளின் மாதிரி சேகரிக்கப்பட்டது. சோதனையில், 19 குடிநீா் ஆலைகளின் மாதிரி பாதுகாப்பற்றது என தெரியவந்தது. இதில் தரம் குறைந்தது 5 ஆலைகள், போலி நிறுவன பெயரில் இயங்கி வந்தது 4 ஆலைகள் என தெரியவந்தது. மேலும் 16 குடிநீா் ஆலைகளின் மாதிரி குடிக்க தகுதியானவை என தெரியவந்தது.
இதுதொடா்பாக மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் மருத்துவா் கதிரவன் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள குடிநீா் ஆலைகள் விதிமுறைகளைப் பின்பற்றிட வேண்டும். இதில் 19 ஆலைகளின் மாதிரி குடிக்க பாதுகாப்பற்றவை என தெரியவந்துள்ளது. அந்த நிறுவனங்களின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதர 9 குடிநீா் ஆலை நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.