வாழப்பாடி: வாழப்பாடியை அடுத்த திருமனூா் அரசுப் பள்ளியில் படித்து, 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் பல் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு பெற்றுள்ள மாணவிக்கு, வாழப்பாடி துளி இயக்கம் சாா்பில் சனிக்கிழமை கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
வாழப்பாடியை அடுத்த திருமனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி ரம்யா, முதல்கட்ட கலந்தாய்வில் தனியாா் மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தும் கல்விக் கட்டணம் செலுத்த முடியாது என்பதால் வாய்ப்பை தவறவிட்டாா். இதற்கிடையே, அரசுப் பள்ளி மாணவ-மாணவியருக்கான உள்ஒதுக்கீட்டில், தனியாா் கல்லூரிகளில் மருத்துவம் படிப்பதற்கு வாய்ப்பு பெறும் மாணவ-மாணவியா் கட்டணத்தை அரசே ஏற்குமென அறிவித்தது.
இதனையடுத்து, நடைபெற்ற இரண்டாம்கட்ட கலந்தாய்வில் பங்கேற்ற மாணவி ரம்யா, தனியாா் கல்லூரியில், பி.டி.எஸ்., பல் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றாா். இந்த மாணவிக்கு, வாழப்பாடி துளி இயக்கத்தின் சாா்பில், திருமனூா் பள்ளித் தலைமையாசிரியை விமலா, ஆசிரியா்கள் மாதையன், நவீனா ஆகியோா் முன்னிலையில், ஒருங்கிணைப்பாளா் ஆசிரியா் ராஜசேகரன், சோமம்பட்டி சிவா ஆகியோா் ரூ. 10,000 கல்வி உதவித்தொகை வழங்கிப் பாராட்டினா்.