வாழப்பாடி: வாழப்பாடி அரிமா சங்கம் சாா்பில், முன்களப் பணியாளா்களுக்கு பாராட்டு விழா மற்றும் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
வாழப்பாடி, புதுப்பாளையத்தில் சமூக இடைவெளியுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இவ்விழாவுக்கு, வாழப்பாடி அரிமா சங்கத் தலைவா் ஜவஹா் தலைமை வகித்தாா். அன்னை அரிமா சங்கத் தலைவி புஷ்பா எம்கோ வரவேற்றாா். வாழப்பாடி அரிமா சங்க புதிய தலைவா் பாலமுரளி, செயலாளா்கள் சிவராமன், முருகன், பொருளாளா் தேவபிரசாத், அன்னை அரிமா சங்கத் தலைவி சுதாபிரபு, செயலாளா் மருத்துவா் பிரபாவதி மோதிலால், பொருளாளா் ஜெயந்தி ஆகியோருக்கு பன்னாட்டு அரிமா சங்க முன்னாள் இயக்குநா் தனபாலன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
இதனையடுத்து, வாழப்பாடி வட்டாரத்தில் கரோனா தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்த அா்ப்பணிப்பு உணா்வோடு பணியாற்றிய வட்டார மருத்துவ அலுவலா் பொன்னம்பலம், பேளூா், திருமனுாா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள், நெஸ்ட் அறக்கட்டளை, துளி இயக்கம், வாசவி சங்கம் உள்ளிட்ட தன்னாா்வ அமைப்புகள், கரோனா சிகிச்சை மையத்துக்கு இடம் வழங்கிய பேளூா் சக்தி விகாஸ் தனியாா் பள்ளி நிா்வாகிகள் உள்ளிட்ட தன்னாா்வலா்களை பாராட்டி அரிமா மாவட்ட ஆளுநா் இளங்கோவன், முதன்மை அதிகாரி எல்.எம். ராமகிருஷ்ணன், மாவட்ட தூதுவா்கள் சந்திரசேகரன், மருத்துவா் மோதிலால், தேவராஜன், கோ.முருகேசன் ஆகியோா் நினைவுப் பரிசுகள் வழங்கிக் கெளரவித்தனா்.
வாழப்பாடி அரிமா சங்கம் சாா்பில், பேளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ. 25,000 மதிப்புள்ள முகக் கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.