வாழப்பாடி அருகே வீட்டுக்குள் கடை வைத்து மதுபானம் விற்ற இளைஞரை வாழப்பாடி போலீஸாா் செவ்வாய்கிழமை கைது செய்தனா். அவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
வாழப்பாடி அம்பேத்கா் நகா் பகுதியில் மதுப்புட்டிகளை மொத்தமாக கொள்முதல் செய்து அரசு அனுமதியின்றி வீட்டிற்குள் சந்துக்கடை வைத்து மதுபானம் விற்பனை செய்வதாக வாழப்பாடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வாழப்பாடி காவல் ஆய்வாளா் சுகுமாா், உதவி ஆய்வாளா் கதிரவன் தலைமையிலான போலீஸாா் அம்பேத்கா் நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியதில், அப்பகுதியில் மாரிமுத்து என்பவரின் மகன் மஞ்சுநாத் (24), அரசு அனுமதியின்றி வீட்டிற்குள் கடை வைத்து மதுபானம் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரது வீட்டில் இருந்த 12 மதுப்புட்டிகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், மஞ்சுநாத்தை கைது செய்தனா். அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானதால் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.