மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 34,144 கன அடியாக அதிகரித்துள்ளது.  
கோப்புப்படம்
கோப்புப்படம்

மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2.07அடி உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாட்டிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி நிரம்பிய நிலையில் இருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து உபரி நீர் திறக்கப்படுகிறது.

இதேபோல் 124.80அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜாசாகர் அணையின் நீர்மட்டம் 110.94அடியாக உயர்ந்துள்ள நிலையில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அங்கிருந்தும் தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டு உள்ளது. கடந்த மூன்று நாட்களாக கர்நாடக அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நீர்வரத்து அதிகரித்து வருவதால் நேற்று காலை 73.27அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 75.34அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2.07அடி உயர்ந்துள்ளது.அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை வினாடிக்கு 19,665கன அடி வீதம் வந்துகொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 34,144கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையின் நீர் இருப்பு 37.47டிஎம்சி ஆக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர தொடங்கியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com