சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள வருதம்பட்டி மேகனம் நூற்பாலை நிறுவனம் உள்பட 11 ஆக்ஸிஜன் செறிவூட்டி இயந்திரங்களை சங்ககிரி வருவாய் கோட்டாட்சியரிடம் வியாழக்கிழமை வழங்கினர்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் கோ.வேடியப்பனிடம் சங்ககிரியை அடுத்த வருதம்பட்டியில் உள்ள மேகனம் நூற்பாலையின் சார்பில் அதன் இயக்குநர்கள் பி.ராஜா, எ.நடேசன் ஆகியோர் ரூ.3.75 ஆயிரம் மதிப்பீட்டில் ஐந்து ஆக்ஸிஜன் செறிவூட்டி இயந்திரங்களும், கோனேரிப்பட்டி பகுதியில் உள்ள கோவை கிரானைட் நிறுவனம், கலைவாணி கிரானைட் நிறுவனம் சார்பில் தலா ரூ.75 ஆயிரம் மதிப்பீட்டில் இரு ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களும், சங்ககிரி மேற்கு தி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டிலான நான்கு ஆக்ஸிஜன் செறிவூட்டி இயந்திரங்களை அதிகாரிகள் பழனியப்பன், ஆத்மராமன் ஆகியோர் வழங்கினர்.
வருவாய் கோட்டாட்சியர் சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு ஏழு இயந்திரங்களும், மகுடஞ்சாவடி, வடுகப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தலா இரண்டு இயந்திரங்களையும் அந்தந்த மருத்துவர்களிடம் வழங்கினார். மருத்துவர்கள் மகுடஞ்சாவடி முத்துசாமி, வடுகப்பட்டி அமுதராணி, சங்ககிரி வட்டாட்சியர் எஸ்.விஜி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ராஜேந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் ஜெயக்குமார், தேர்தல் துணை வட்டாட்சியர் பி.சிவராஜ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.