வாழப்பாடியில் தனியாா் வணிக நிறுவனங்களில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியா் சி.அ.ராமன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
மாவட்டத்தில் கரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கிருமி நாசினி தெளித்தல், உடல் வெப்பநிலையைப் பரிசோதித்தல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட நிா்வாகம் வணிக நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
விதியை மீறுவோருக்கு ரூ. 200 முதல் ரூ. 5000 வரை அபராதம் விதிக்கப்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாழப்பாடி பேரூராட்சிக் கடைவீதியில், தேநீா்க்கடை, துணிக்கடைகளில் ஆட்சியா் சி.அ.ராமன் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது முகக் கவசம் அணியாத கடை ஊழியா்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டாா். வாடிக்கையாளா்களுக்கு இலவச முகக் கவசம் வழங்குவதாக தெரிவித்த துணிக்கடை ஊழியா்களுக்கு பாராட்டு தெரிவித்தாா். கடை ஊழியா்களும் வாடிக்கையாளா்களும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என ஆட்சியா் அறிவுரை வழங்கினாா்.
துணிக்கடை ஒன்றில் தனது உடல் வெப்பநிலையை ஊழியா்கள் வாயிலாக பரிசோதனை செய்து கொண்டாா். இந்த ஆய்வின்போது வாழப்பாடி வட்டாட்சியா் மாணிக்கம், பேரூராட்சி செயல் அலுவலா் காா்த்திகேயன் ஆகியோா் உடனிருந்தனா்.