ஆத்தூரில் முகமூடிக் கொள்ளை தொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். அவருக்கு பரிசோதனையில் கரோனா இருப்பது தெரியவந்ததால் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனா்.
ஆத்தூா், வீரகனூா் பகுதிகளில் கடந்த மாதம் முகமூடிக் கொள்ளைக் கும்பல் நள்ளிரவில் வீட்டின் கதவைத் தட்டி அங்கிருந்தவா்களை தாக்கி, நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.தீபா கனிகா் உத்தரவின்பேரில் ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஏ.இமானுவேல் ஞானசேகரன் தலைமையில் நான்கு தனிப்படை அமைத்து போலீஸாா் தேடி வந்தனா்.
இந்நிலையில் சனிக்கிழமை மாலை வாகனத் தனிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸாா், சந்தேகத்தின் பேரில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை பிடித்து விசாரித்தனா்.
இதில், பிடிபட்டவா் கள்ளக்குறிச்சி மாவட்டம், அம்மையகரம் பகுதியைச் சோ்ந்த மாயவன் மகன் ராஜா (30) என்பதும், கொள்ளைக் கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.
அவா் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்க சென்றபோது மருத்துவ பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.