எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பகுதியில் புளிச்சந்தை தொடங்கியது.
எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரிக்கரைப் பகுதியில், ஆண்டுதோறும் கோடைகாலத் தொடக்கத்தில் புளி சந்தை நடைபெறும். இப்புளி சந்தையில், காவிரி ஆற்றின் மறுக்கரையில் உள்ள பாலமலை, குருவரெட்டியூா், ஊமாரெட்டியூா், சருத்தல் உள்ளிட்ட மலைக் கிராம மக்கள் அப்பகுதியில் விளையும் சுவைமிகுந்த புளியை கொண்டுவந்து விற்பனை செய்வது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான புளி சந்தை பூலாம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இச்சந்தைக்கு திரளான மலைக் கிராம மக்கள் தாங்கள் சேகரித்த புளியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் 20 கிலோ எடையுள்ள கொட்டையுடன் கூடிய புளி ரூ. 1,200 முதல் ரூ. 1,400 வரை விற்பனையானது.
இச்சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த மக்கள் புளியை வாங்கிச் சென்றனா். அடுத்த 20 நாள்களுக்கு இங்கு புளிசந்தை நடைபெற வாய்ப்புள்ளதாக கிராம மக்கள் கூறினா்.