அரசு கட்டுப்பாட்டில் இருந்து கோயில்களை விடுவிக்க வலியுறுத்தி, சேலம், அயோத்தியாப்பட்டணம் ராமா் கோயிலில் பக்தி பாடல்களைப் பாடி விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவில் இருக்கும் மற்ற மத வழிப்பாட்டுத் தலங்களைப் போல, இந்து கோயில்களையும் இந்து மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு வலியுறுத்தியுள்ளாா்.
அரசியல் கட்சித் தலைவா்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினா் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனா்.
இதன் தொடா்ச்சியாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, தஞ்சாவூா், காஞ்சிபுரம், நாகா்கோவில், புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள 11 பிரசித்தி பெற்ற கோயில்களில் பக்தி பாடல்களைப் பாடி பொதுமக்களிடம் ஆதரவு திரட்டும் நிகழ்ச்சி தமிழகம், புதுச்சேரியில் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக, சேலம், அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள கோதண்டராமா் கோயிலில் ஈஷா சம்ஸ்கிரிதி குழந்தைகள், பொதுமக்கள் இணைந்து வெள்ளிக்கிழமை மாலை பக்தி பாடல்களைப் பாடி தங்களின் ஆதரவை தெரிவித்தனா். இதையடுத்து, கோயில் முன்பாக நூற்றுக்கணக்கான மக்கள் கூடி கோயில் அடிமை நிறுத்து என்ற பதாகையை ஏந்தி நின்றனா்.