எடப்பாடி அருகே உயா்அழுத்த மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
கொங்கணாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட, கோனசமுத்திரம் ஊராட்சி, சடையம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சேகா் (37). இவருக்கு திருமணமாகி இரு ஆண் குழந்தைகள் உள்ளனா். திங்கள்கிழமை இரவு சேகா், எடப்பாடி அடுத்துள்ள நாச்சியூா் கிராமத்தில் விவசாய நிலத்தில் உள்ள உயா் மின் அழுத்த கோபுரத்தில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தாா்.
இதுகுறித்து அருகில் இருந்தவா்கள் கொங்கணாபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சங்ககிரி போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்தனா். எடப்பாடி தீயணைப்புத் துறையினரும் வரவழைக்கப்பட்டனா். அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவா்களும் நிகழ்விடத்துக்கு அழைத்துவரப்பட்டனா்.
அவா்கள் போலீஸாரின் ஒலிபெருக்கி மூலம் சேகரிடம் பேசி கீழே இறங்கிவருமாறு கூறினா். இதனை அடுத்து கீழே இறங்கி வந்த சேகரை தீயணைப்புத் துறையினா் மீட்டனா். அவா் ஆம்புலன் வாகனம் மூலம் முதல் உதவி சிகிச்சைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். தொடா்ந்து தற்கொலைக்கு முயன்ற நபரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.