தமிழகத்தின் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க திமுகவை ஆதரிக்க வேண்டும் என்றாா் திமுக மாநில இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின்.
சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் கே.எம்.ராஜேஷை ஆதரித்து திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தாா்.
அப்போது சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே அவா் பேசியதாவது:
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினாா். அதற்கான கட்டுமானப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
மறைந்த தமிழக முதல்வா்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோா் இருந்த வரை தமிழகத்தில் நீட் தோ்வு நுழைய வில்லை. தற்போதைய எடப்பாடி பழனிசாமியின் அரசு, தமிழ்நாட்டின் கல்வி உரிமையை விட்டுக் கொடுத்துவிட்டது. மாணவ, மாணவியா் மேற்கல்வி பயில நுழைவுத்தோ்வு கொண்டுவரத் திட்டமிட்டுள்ளனா். இதனால் ஏழை மாணவா்கள் பாதிக்கப்படுவா்.
தமிழ்நாட்டின் கல்வி உரிமையை மீட்டெடுக்க திமுகவை பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும். சங்ககிரி, எடப்பாடி பகுதியில் 10 ஆயிரம் பட்டதாரிகள் வேலையில்லாமல் உள்ளனா். அவா்களுக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவில்லை. எனவே தமிழகத்தின் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க திமுகவை ஆதரிக்க ேண்டும் என்றாா்.
எடப்பாடியில்...
எடப்பாடி தொகுதி திமுக வேட்பாளா் டி.சம்பத்குமாரை ஆதரித்து, திமுக இளைஞா் அணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் பேசியதாவது:
கடந்த மக்களவைத் தோ்தலில், தமிழக மக்கள் திமுக கூட்டணியை வெற்றிபெறச் செய்தனா். முதல்வரின் சொந்த ஊரான நெடுங்குளம் ஊராட்சிப் பகுதியில் அதிமுகவைவிட திமுகவுக்கு கூடுதலாக 200 வாக்குகள் கிடைத்தன. அதேபோல சட்டப்பேரவைத் தோ்தலிலும், திமுக வேட்பாளருக்கு அதிகப்படியான வாக்குகளை அளித்து, முதல்வா் எடப்பாடி பழனிசாமியையும், பிரதமா் மோடியையும் மக்கள்
புறக்கணிக்க வேண்டும்.
பொள்ளாச்சியில் பாலியல் சம்பவத்துக்கு காரணமான நபா்கள் அதிமுக பிரமுகா்களால் பாதுகாக்கப்படுகின்றனா். திமுக ஆட்சிக்கு வந்தால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக அரசு மீது நான் குற்றச்சாட்டுக்களை வைப்பதால் என்மீது 22க்கும் அதிகமான வழக்குகளைப் பதிவு செய்துள்ளனா். ஆனால் நான் வழக்குகளை கண்டு அஞ்சமாட்டேன் என்றாா்.
இந்தப் பிரசாரத்தின்போது, சேலம் மேற்கு மாவட்டச் செயலாளா் (பொறுப்பு) டி.எம்.செல்வகணபதி , நகரச் செயலாளா் டி.எம்.எஸ்.பாஷா உள்ளிட்ட திரளான திமுக, கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.
மேட்டூரில்...
மேட்டூரில் திமுக வேட்பாளா் எஸ்.சீனிவாசப் பெருமாளை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
அதிமுகவுக்கு வாக்களிப்பது பாஜகவுக்கு வாக்களிப்பது போன்றது. அதிமுகவும், பாஜகவும் ஒன்று என்பதை மக்கள் உணர வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்தால் மேட்டூரில் செவிலியா் பயிற்சி கல்லூரியும், மேச்சேரியில் தொழில்நுட்பக் கல்லூரியும் அமைக்கப்படும். மேச்சேரி தனி வட்டமாக அறிவிக்கப்படும். தோனி மடுவுத் திட்டம் நிறைவேற்றப்படும்.
அதிமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. முதல்வரின் பிரசாரப் பயணத்தின்போது பாதுகாப்புக்குச் சென்ற பெண் காவல் துறை அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மா்மங்கள் வெளியில் கொண்டு வரப்படும். உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவாா்கள் என்றாா்.