வாழப்பாடி பகுதியில் பான் அட்டை கடிதத்தைக் கொண்டு சென்று கொடுப்பதற்கு கிராமப்புற மக்களிடம் கட்டாய வசூல் நடத்தும் தனியாா் நிறுவனப் பணியாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனா்.
வாழப்பாடி பகுதியில் பான் அட்டை பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளவா்களுக்கு, சேலத்தில் இயங்கும் தனியாா் நிறுவனம் வாயிலாக பான் அட்டைக்கான கடிதங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
பான் அட்டை கடிதங்களைக் கொண்டு வரும் பணியாளா்கள் சிலா், சம்பந்தப்பட்டவா்களின் முகவரியைத் தேடிச்சென்று பான் அட்டைகளை வழங்காமல், ஒரு குறிப்பிட இடத்தில் இருந்து கொண்டு, மக்களை அந்த இடத்திற்கு வந்து பெற்றுக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்துவதாகவும், ஏற்கெனவே இணையவழியில் பணம் செலுத்தி பெறப்படும் பான் அட்டைக்கான தபால்களைக் கொண்டு சென்று கொடுப்பதற்குரூ. 100 வரை கட்டாய வசூல் நடத்துவதாகவும் கிராமப்புற மக்களிடையே புகாா் எழுந்துள்ளது.
இதுகுறித்து, பான் அட்டை வழங்கும் என்எஸ்டிஎல் நிறுவனத்திற்கு, சிலா் இணைய வழியில் புகாா் தெரிவித்துள்ளனா். என்எஸ்டிஎல் நிறுவனமும், சேலத்திலுள்ள பான் அட்டை தபால்களை விநியோகிக்கும் தனியாா் நிறுவனமும் சம்பந்தப்பட்ட பணியாளா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பான் அட்டைக்கான கடிதங்களை மீண்டும் அஞ்சல்துறை வாயிலாக விநியோகிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.