சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான 15 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன.
சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனையடுத்து சங்ககிரி அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு 40 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
இதனையடுத்து புதிதாக தொடங்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்திற்கு சேலம் மாவட்ட நிர்வாகம், சங்ககிரி வருவாய்த்துறையின் சார்பில் சங்ககிரி சுற்றியுள்ள பல்வேறு தனியார் நிறுவனங்கள், பொதுநல அமைப்புகளிடம் உதவிகள் செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சங்ககிரியை அடுத்த காகாபாளையத்தில் உள்ள பாரகன் பாலிமர் ப்ராடக்ட்ஸ் பிரைவேட் லிமிட்டேட் சார்பில் அதன் துணை பொது மேலாளர் வி.எஸ்.நரசிம்மன் தலைமையிலான அதிகாரிகள் சங்ககிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 15 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் கோ.வேடியப்பனிடம் வழங்கினர். அதனை வருவாய் கோட்டாட்சியர் சங்ககிரி அரசு மருத்துவமனை மருத்துவர் எம்.சுரேஷிடம் ஒப்படைத்தார்.
சங்ககிரி வட்டாட்சியர் எஸ்.விஜி, மண்டல துணை வட்டாட்சியர் ஜெயக்குமார், தேர்தல் துணை வட்டாட்சியர் பி.சிவராஜ், வருவாய் ஆய்வாளர் சித்ரா, கிராம நிர்வாக அலுவலர் பூபதி, தனியார் நிறுனத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.