சேலத்தில் காவல் துறை சாா்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கப்பட்டது.
சேலம் மாநகராட்சி பகுதி முழுவதும் முழு பொது முடக்கம் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் சேலம் மாநகர காவல் ஆணையா் சந்தோஷ்குமாா் உத்தரவிட்டிருந்தாா். இதையடுத்து, அனைத்துப் பகுதியிலும் போலீஸாா் வாகனப் பிரசாரம் செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், புதன்கிழமை காலை சேலம், சூரமங்கலம் காவல் நிலையத்தில் கரோனா தொற்று விழிப்புணா்வு வாகனப் பிரசாரம் தொடங்கி வைக்கப்பட்டது (படம்). மேலும், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கும் நிகழ்ச்சியை உதவி ஆணையா் நாகராஜன் தொடங்கி வைத்தாா்.
இந்த ஆட்டோக்கள் மருந்துக் கடைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் நின்று முழு பொது முடக்கம் குறித்தும், தொற்று பரவல் குறித்தும், தொற்று முழுவதும் இல்லாமல் செய்ய என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் விளக்கிக் கூற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.