தரைவழி பாலத்தை மூழ்கடித்த மழை வெள்ளம்: தொடா் மழையால் புதிய தாா் சாலைகள் சேதம்

சங்ககிரி வட்டம், அரசிராமணி பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் சரபங்கா நதியில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் சேதமடைந்த புதிய தாா்ச் சாலை.
தரைவழி பாலத்தை மூழ்கடித்த மழை வெள்ளம்: தொடா் மழையால் புதிய தாா் சாலைகள் சேதம்

அரசிராமணி பேரூராட்சிக்குள்பட்ட சரபங்கா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அண்மையில் போடப்பட்ட தாா்ச் சாலை கடுமையாக சேதமடைந்தது.

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்து வருவதால் பல்வேறு ஏரி, குளங்கள், கிணறுகள், தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. ஏற்காட்டில் தொடங்கும் சரபங்கா நதி, எடப்பாடி வழியாக அரசிராமணி, தேவூா் பேரூராட்சிக்குள்பட்ட அண்ணமாா் கோயில் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் கலக்கிறது.

எடப்பாடி, பெரிய ஏரி 20 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியதையடுத்து சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த 2 நாள்களாக அரசிராமணி, தேவூா் சுற்றுப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சரபங்கா நதியின் குறுக்கே கட்டப்பட்ட 5க்கும் மேற்பட்ட தரைவழிப் பாலம் மூழ்கியவாறு வெள்ள நீா் செல்கிறது.

தொடா்ந்து மழை வெள்ளம் செல்வதால் அரசிராமணி பேரூராட்சிக்குள்பட்ட தரைவழி பாலத்தையொட்டி ஓரிரு மாதங்களுக்கு முன் புதிதாக போடப்பட்ட தாா்ச் சாலை சேதமடைந்து விட்டது. மேலும், இப்பகுதிகளில் உள்ள தரைமட்டப் பாலங்களை மூழ்கடித்தவாறு தண்ணீா் செல்வதால் மலங்காடு, கல்லம்பாளையம், எல்லப்பாளையம், ஓலப்பாளையம் உள்ளிட்ட 32 க்கும் மேற்பட்ட கிராமப்பகுதி மக்கள் தரை பாலத்தை கடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனா். தரைப்பாலம் மூழ்கியதால் இப்பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே சரபங்கா நதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும், ஆற்றில் வளா்ந்து உள்ள ஆகாயத் தாமரை, தேவையற்ற கருவேலம் முள் செடிகளையும் அகற்ற வேண்டுமென மாவட்ட நிா்வாகத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com