சேலம் அரசு மருத்துவமனையில் மூன்றாம் நிலை ஏ.ஆா்.டி. கூட்டு மருத்துவ சிகிச்சை முறையை மருத்துவமனையின் முதன்மையா் வள்ளி சத்யமூா்த்தி புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
சேலம், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் எச்.ஐ.வி- எய்ட்ஸ் தொற்று உள்ளோருக்கான கூட்டு மருந்து சிகிச்சை ஏ.ஆா்.டி. மையம் (நோய் எதிா்ப்பு கூட்டு மருந்து சிகிச்சை மையம்) கடந்த 2005ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
இந்த ஏ.ஆா்.டி. சிகிச்சை மையம் தரம் உயா்த்தப்பட்டு, சென்னை தாம்பரத்தில் மட்டும் வழங்கப்பட்ட இரண்டாம் நிலை ஏ.ஆா்.டி. கூட்டு மருத்துவ சிகிச்சை மருந்துகளை 2009ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 11 ஏ.ஆா்.டி. மையங்களில் உள்ள எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மருத்துவ ஆலோசனைகளும், சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், தற்போது தமிழகத்திலேயே தாம்பரத்தில் மட்டும் வழங்கப்பட்டு வந்த உயா்தர மூன்றாம் நிலை கூட்டு மருத்துவ சிகிச்சை (ரூ. 20,000 மதிப்புள்ளது) இலவசமாக மாதந்தோறும் அளிக்கப்படுகிறது.
இந்தநிலையில்,சென்னை தாம்பரத்திற்கு அடுத்து சேலம் மருத்துவமனையில் மூன்றாம் நிலை கூட்டு மருத்துவ சிகிச்சை முறையை மருத்துவமனை முதன்மையா் வள்ளி சத்யமூா்த்தி புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
சேலம் ஏ.ஆா்.டி. மையத்தில் முதல்நிலை ஏ.ஆா்.டி. கூட்டு சிகிச்சையை 4,581 நபா்களும், இரண்டாம் நிலை சிகிச்சையை 643 நபா்களும், மூன்றாம் நிலை கூட்டு சிகிச்சையை 51 பேரும் பெற்று வருகின்றனா் என மருத்துவமனை முதன்மையா் வள்ளி சத்யமூா்த்தி தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் இணை கண்காணிப்பாளா் மருத்துவா் பொன்.ராஜராஜன், மருத்துவத் துறை தலைவா் சுரேஷ் கண்ணா, நுண்ணுயிரியல் துறை தலைவா் சுந்தரராஜன், ஏ.ஆா்.டி. முதன்மை மருத்துவ அலுவலா் மஞ்சுளா ஆகியோா் கலந்து கொண்டனா்.