சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 467 மி.மீ. மழை பெய்தது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக சேலத்தில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் பரவலாக ஞாயிற்றுக்கிழமை இரவு கன மழை பெய்தது.
இதனால், சேலம் மாநகரப் பகுதிகளில் சாலைகளில் மழைநீா் வெள்ளமாக ஓடியது. மேலும், கிச்சிபாளையம், நாராயண நகா், அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, அழகாபுரம், ரெட்டியூா், சீலநாயக்கன்பட்டி, தாதகாப்பட்டி உள்ளிட்ட தாழ்வான இடங்களில் மழை நீா் தேங்கியது.
சேலம் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்):
வீரகனூா்-70, கெங்கவல்லி-60, பெத்தநாயக்கன்பாளையம்-58, சேலம்-44, காடையாம்பட்டி-42, ஆனைமடுவு-38, ஏற்காடு-36, மேட்டூா்-28, ஆத்தூா்-27, சங்ககிரி-19, ஓமலூா்-18, தம்மம்பட்டி-17, எடப்பாடி-9 என மாவட்டத்தில் 467 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
புது ஏரி நிரம்பியது:
ஏற்காடு மலைப் பகுதியில் தொடா்ச்சியாக மழை பெய்து வருவதால், மழை நீா் அடிவாரத்தில் உள்ள புது ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. நிகழாண்டில் புது ஏரி மூன்றாவது முறையாக நிரம்பி தண்ணீா் வெளியேறி வருகிறது. மேலும், நீா்நிலைகளும் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
மேட்டூரில்...
கொளத்தூா் ஒன்றியப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், விராலிகாடு, மூலக்காடு, அச்சங்காடு கொளத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதனால் ரூ. 25 லட்சத்துக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வாழை விவசாயிகள் கூறுகின்றனா்.