சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த காரிப்பட்டியில் பழுதடைந்த கட்டடத்தில் இயங்கி வரும் கலைஞா்நகா் பொது விநியோகக் கடைக்கு, புதிய கட்டடம் கட்ட வேண்டுமென, இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து காரிப்பட்டி ஊராட்சிமன்றத் தலைவா் ர.மனோசூரியன், மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
வாழப்பாடி வட்டம், காரிப்பட்டி ஊராட்சியில் இயங்கி வந்த பொது விநியோகக்கடை, மக்கள்தொகை பெருக்கத்தின் அடிப்படையில் கடந்த 2010ஆம் ஆண்டு இரண்டாக பிரிக்கப்பட்டது.
கலைஞா்நகா் பகுதியில் பொது விநியோகக் கடை இயங்கி வந்த மகளிா் பல்நோக்கு மைய கட்டடம் பழுதடைந்து எந்நேரத்திலும் சிதையும் ஆபத்தான நிலையில் உள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக, இந்த பொது விநியோகக் கடைக்கு அரசு கட்டடம் கட்டப்படவில்லை.
எனவே, இப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி, கலைஞா்நகா் பொது விநியோகக் கடைக்கு நிலையான அரசு கட்டடம் அமைத்துக் கொடுக்க மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.