சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூளையூரில் நீட் தேர்வு அச்சம் காரணமாக உயிரிழந்த மாணவன் தனுஷின் வீட்டிற்கு இன்று வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி மாநிலத் தலைவர் யுவராஜ் மற்றும் சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுசீத்திர குமார் ஆகியோர் வந்தனர். உயிரிழந்த மாணவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்கள்.
பின்னர் யுவராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்திற்கு நீட்தேர்வு அவசியமில்லை. நீட் தேர்வு ஏழை நடுத்தர மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கிறது. கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு கனவாகவே போகிறது.
மத்திய அரசின் தாமதத்தால் ஏற்கனவே பல உயிர்களை இழந்து வருகிறோம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் மத்திய அரசு தமிழகத்தில் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தமிழக பாஜகவினர் மத்திய அரசுடன் பேசி நிரந்தரமாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
இல்லையானால் கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு கனவாகவே முடியும். தமிழகத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சிகளும் நீட் என்ற கொடூர தேர்வை ரத்து செய்ய பாடுபட வேண்டும். நாங்கள் பாஜக கூட்டணியில் இருந்தாலும் தமிழகச் சூழலுக்கு ஏற்ப மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஏற்ப குரல் கொடுத்து வருகிறோம். தமிழகத்தில் சட்டமன்றத்தில் தமிழக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய எடுத்துள்ள முடிவுக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம் என்றார்.