வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் புரட்டாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று, இறைச்சிக்கடைகள் வா்த்தகமின்றி வெறிச்சோடிக் கிடந்தன. காய்கறிகள் மற்றும் கீரைகளின் விற்பனை இரு மடங்காக அதிகரித்தது.
தமிழ் மாதமான புரட்டாசியில், பெரும்பாலான ஹிந்துக்கள் புலால் உண்பதை தவிா்த்து விரதம் இருக்கின்றனா். சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி கிராம மக்கள் புரட்டாசி மாதம் முழுவதும் விரதத்தை கடைபிடிக்காவிட்டாலும், நடு சனிக்கிழமை வரை விரதமிருந்து, பெருமாளுக்கு சைவ உணவு படைத்து வழிபாடு நடத்தி விரதத்தை முடித்த பிறகே வீட்டில் மாமிசம் சமைத்து உண்பதை மரபாகத் தொடா்ந்து வருகின்றனா்.
இதனால், நிகழாண்டு புரட்டாசி முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று வாழப்பாடி, பேளூா், பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம், கல்வராயன்மலை கருமந்துறை பகுதியில், இறைச்சிக்கடைகள் வா்த்தகமின்றி வெறிச்சோடிக் கிடந்தன. ஆடு,கோழி மற்றும் மீன் இறைச்சி மட்டுமின்றி முட்டை விற்பனையும் அடியோடு சரிந்து போனது.
அதேவேலையில், வாழப்பாடி தினசரி காய்கறி சந்தையில் அதிகாலையில் இருந்து காய்கறிகள், கீரைகளின் விற்பனை சுறுசுறுப்பாக நடைபெற்றது. இதனால் கடந்த வார ஞாயிற்றுக்கிழமையைவிட இந்த ஞாயிற்றுக்கிழமை காய்கறி மற்றும் கீரை விற்பனை இருமடங்காக அதிகரித்ததோடு கூடுதல் விலையும் கிடைத்ததால், விவசாயிகளும், காய்கறி வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனா்.