வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் அரிசி ஏற்றி வந்த லாரி மீது தனியார் ஆம்னி பேருந்து மீது மோதியதால் நிலை தடுமாறிய லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர், உதவியாளர் இருவர் காயமடைந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாசாமி. இவருக்குச் சொந்தமான லாரியில் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சின்னசேலம் அடுத்த அமையாகரம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் ராஜேந்திரன்(60). இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சேலம் நோக்கி லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். இவரோடு அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் (40) என்பவர் உதவியாளராக (கிளீனர்) உடன் வந்துள்ளார்.
இந்த லாரி காலை 6 மணியளவில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வாழப்பாடி அருகே முத்தம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது, சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து லாரியின் பின்புறம் பலமாக மோதியதில், நிலை தடுமாறிய லாரி கட்டுப்பாடு இழந்தது. எதிர்பாராதவிதமாக தனியார் பள்ளி அருகே சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் ராஜேந்திரன், உதவியாளர் கனகராஜ் ஆகிய இருவரும் காயமடைந்தனர். தனியார் ஆம்னி பேருந்தில் பயணித்த 13 பேரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த விபத்து குறித்து வாழப்பாடி காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.