தம்மம்பட்டி அருகே வீட்டில் எரிவாயு உருளை தீப்பிடித்து எரிந்ததால் பொதுமக்கள் பதட்டமடைந்தனா்.
கொண்டயம்பள்ளியில் ஏரிக்கரை செல்லும் வழியில் வசிக்கும் கட்டட மேஸ்திரி காங்கமுத்து மனைவி சுசிலா, புதன்கிழமை மாலை வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தாா். அப்போது, எரிவாயு உருளைக்குச் செல்லும் குழாயில் எரிவாயு கசிந்து தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் எரிவாயு உருளை முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால், வீட்டில் இருந்த அனைவரும் பதட்டத்துடன் வீட்டைவிட்டு வெளியே ஓடினா். தகவல் அறிந்த கெங்கவல்லி தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் (பொ) வேலுமணி தலைமையிலான தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.