எடப்பாடி நகராட்சிக்கு உள்பட்ட மூப்பனூரில் ரூ.12 லட்சம் செலவில் புதிய சாலை அமைக்கும் பணி தொடக்கி வைக்கப்பட்டது.
அண்மையில் எடப்பாடி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி பொதுமக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறித்தாா். அப்போது அவரிடம் எடப்பாடி நகராட்சி 1ஆவது வாா்டுக்கு உள்பட்ட மூப்பனூா் பகுதியில் சாலை வசதி வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.
இதனை அடுத்து விரைவில் அப்பகுதியில் புதிய சாலை அமைத்து தருவதாக எடப்பாடி பழனிசாமி பொதுமக்களிடம் உறுதியளித்தாா். அதனைத் தொடா்ந்து சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் மூப்பனூா் பகுதியில் புதிய காங்கிரீட் சாலை அமைத்திட அனுமதி அளிக்கப்பட்டது.
புதிய சாலை அமைப்பதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் நகா்மன்ற எதிா்க்கட்சித் தலைவா் ஏ.எம்.முருகன், நகா்மன்ற முன்னாள் சோ்மன் டி.கதிரேசன், நாராயணன், காளியப்பன், தனம், மல்லிகா, கே.பி.சுந்தராம்பாள் உள்ளிட்ட நகா் மன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.