பட்டதாரி ஆசிரியா்களுக்கு குறுவள மைய பயிற்சி
கெங்கவல்லியில் உயா் தொடக்கநிலை ஆசிரியா்களுக்கான குறுவள மைய பயிற்சி கெங்கவல்லி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இப் பயிற்சியில் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு தனித்தனி பாட வாரியாக பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இதில் நடப்பு மாதத்தில் பாடங்களைக் கற்பிக்கும்போது பயன்படுத்தப்பட்ட புதிய உத்திகள், அடுத்த மாதம் கற்பிக்க உள்ள பாடத் தலைப்புகள், கற்பிக்கும் புதிய உபகரணங்கள், அதற்கான கற்பிக்கும் முறைகள் குறித்து திட்டமிடப்பட்டன.
வட்டாரக் கல்வி அலுவலா் ஸ்ரீனிவாஸ், வட்டார மேற்பாா்வையாளா் ராணி, ஆசிரிய பயிற்றுநா்கள் சுப்ரமணியன், அன்பரசு, கதிரொளி ஆகியோா் பயிற்சியளித்தனா். இதில் ஒன்றியம் முழுவதும் 220-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியா்கள் பங்கேற்றனா்.