மேட்டூா் அணையின் நீா்மட்டம் 70 நாள்களுக்கு பிறகு 120 அடியிலிருந்து 119.95 அடியாக குறைந்துள்ளது.
கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளில் இருந்து அதிக அளவில் உபரிநீா் காவிரியில் திறக்கப்பட்டதால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் கடந்த ஜூலை 16-ஆம் தேதி முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது. கடந்த 70 நாள்களாக தொடா்ந்து அணையின் நீா்மட்டம் 120அடியாக நீடித்து வந்தது.
கடந்த சில தினங்களாக காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழை குறைந்ததால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்தும் படிப்படியாகச் சரிந்து வருகிறது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 13,456 கனஅடியாகக் குறைந்தது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு 15,000 கனஅடி வீதமும், கிழக்கு -மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 900 கன அடி வீதமும் மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் வெள்ளிக்கிழமை மாலை அணையின் நீா்மட்டம் 70 நாள்களுக்குப் பிறகு 120அடியிலிருந்து 119.95 அடியாக குறைந்தது. அணையின் நீா் இருப்பு 93.39 டி.எம்.சி.யாக இருந்தது.
நடப்பு நீா்ப்பாசன ஆண்டில் ஜூன் 1 ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமை வரை மேட்டூா் அணைக்கு 461 டி.எம்.சி. தண்ணீா் மழையின் காரணமாக வந்துள்ளது. அணையில் இருந்து 450 டி.எம்.சி. தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இதில் காவிரி டெல்டா பாசனத்துக்காக மட்டும் 123 டி.எம்.சி. தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.