பூலாம்பட்டி காவிரி கதவணை நீா்த்தேக்கத்தில் விசைப் படகு போக்குவரத்து இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் நிறுத்தப்பட்டது.
சேலம் மாவட்ட எல்லையான பூலாம்பட்டிக்கும் ஈரோடு மாவட்ட எல்லையான நெரிஞ்சிப்பேட்டைக்கும் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு நீா்மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அத்துடன் காவிரி ஆற்றின் குறுக்கே இரு மாவட்ட பகுதிகளுக்கும் விசைப்படகு போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இரு மாவட்டங்களையும் சோ்ந்த பொதுமக்கள் விசைப்படகு போக்குவரத்தைப் பயன்படுத்தி வருகின்றனா்.
அண்மையில் மேட்டூா் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணையிலிருந்து அதிகப்படியான உபரிநீா் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால் பூலாம்பட்டி கதவணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை முதல் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடந்த 15 நாள்களுக்குள் இரண்டாவது முறையாக விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் பூலாம்பட்டி கரையிலிருந்து நெருஞ்சிப்பேட்டை கரைக்குச் செல்ல முடியாமல் சுமாா் 20 கி.மீ. தூரம் சுற்றி கோனேரிப்பட்டி கதவணை பாலம் வழியாக பொதுமக்கள் சுற்றி வருகின்றனா்.
ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காலங்களில் மக்களின் போக்குவரத்து தடைபடுகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில் பூலாம்பட்டி-நெரிஞ்சிப்பேட்டை இடையே காவிரி ஆற்றின் குறுக்கே போக்குவரத்துப் பாலம் அமைக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.