மேட்டூர்: வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக மேட்டூர் எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேட்டூர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பாமகவை சேர்ந்த எஸ்.சதாசிவம் . சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் பாமகவை சேர்ந்த சதாசிவம் மீது கொளத்தூர் காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளில் 153 (A) (1)( a), 505 (2) என்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேட்டூரை அடுத்த கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் கருங்கலூரில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சி ஆலோசனை கூட்டத்தில் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம் பேசினார். அப்போது சமூக நல்லிணக்கத்திற்கு எதிராகவும், சாதி பிரிவினை மற்றும் வன்முறையை தூண்டும் விதமாகவும் பேசியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சியின் சேலம் வடக்கு மாவட்ட செயலாளர் வசந்த், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட கொளத்தூர் காவல் துறையினர் இன்று மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேட்டூர் பா.ம.க எம்எல்ஏ மீது விசிக கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து இருப்பதால் கொளத்தூரில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.