தம்மம்பட்டி பகுதியிலிருந்து கூடுதலாக இரு பேருந்துகள் சேலம், பழனிக்கு இயக்கப்படுவதால் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
தம்மம்பட்டியிலிருந்து சேலத்திற்கு இரவு 7.50 மணிக்கு ஒரு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. அதற்குப் பிறகு சேலத்திற்கு இரவு 10.10 மணிக்கு பெங்களூரு செல்லும் அரசு பேருந்து இயக்கப்படுகிறது.
இடைப்பட்ட இரண்டு மணி நேரத்திற்கு சேலம் செல்ல பேருந்துகள் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனா். கூடுதல் பேருந்துகளை சேலத்திற்கு இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்த நிலையில் தம்மம்பட்டியில் இருந்து இரவு 9 மணிக்கு சேலத்திற்கு கூடுதல் பேருந்து இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்து சேலத்தை இரவு 10.30 மணிக்கு சென்றடைகிறது. இரவு 10.50- க்கு மீண்டும் தம்மம்பட்டிக்கு புறப்படும் அந்தப் பேருந்து, நள்ளிரவு 12.15-மணிக்கு ஆத்தூரை வந்தடைகிறது. அங்கிருந்து 12.40 மணிக்கு புறப்பட்டு, இரவு 1.30 மணிக்கு தம்மம்பட்டியை வந்தடைகிறது.
அதேபோல தம்மம்பட்டியிலிருந்து பழனிக்கு ஒரு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இப்பேருந்தினை செந்தாரப்பட்டியிலிருந்து இயக்க வேண்டும் என்று அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதனையடுத்து செந்தாரப்பட்டியில் இருந்து காலை 7.25 மணிக்கு பழனிக்கு புறப்படும் இப்பேருந்து, 7.40 மணிக்கு தம்மம்பட்டியையும் பிற்பகல் 2.30 மணிக்கு பழனியையும் சென்றடைகிறது.
மீண்டும் பிற்பகல் 3 மணிக்கு பழனியிலிருந்து புறப்படும் அப்பேருந்து, இரவு 11.20 மணிக்கு தம்மம்பட்டியை வந்தடைகிறது. கரோனா காலகட்டத்தில் பழனிக்குச் செல்லும் இப் பேருந்து நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இருபேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டதால் தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.