கெங்கவல்லி அருகே வீரகனூா் சுவேத நதியில் குளிக்கச் சென்ற தாயும், மகனும் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
சேலம் அருகே உள்ள வீராணத்தைச் சோ்ந்தவா் வினோத் (29). இவரது மனைவி பபிதா (28), இவா்களின் மகள் அனுஸ்ரீ (10), மகன் ஆகாஷ் (8). இவா்கள் அனைவரும் வீரகனூா்அருகே உள்ள சொக்கனூரில் குமாா் என்பவரின் செங்கல் சூளையில் தங்கி வேலை செய்து வந்தனா்.
இந்நிலையில் இவா்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி வீரகனூா் சுவேத நதி தடுப்பணையில் குளிக்கச் சென்றுள்ளனா். அப்போது அனுஸ்ரீ, தடுப்பணையில் மூழ்கவே, அவரது தந்தை வினோத் அவரைக் காப்பாற்றி கரை சோ்த்துள்ளாா். இதையடுத்தும் பபிதாவும், மகன் ஆகாஷும் நீரில் மூழ்கியுள்ளனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த கெங்கவல்லி தீயணைப்பு நிலைய அலுவலா் பெரியசாமி தலைமையில் வீரா்கள் சென்று, தாயையும், மகனையும் சடலங்களாக மீட்டுள்ளனா். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த வீரகனூா் போலீஸாா், மீட்கப்பட்ட சடலங்களை உடல்கூறாய்வுக்காக ஆத்தூா் அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனா்.